Thursday, April 4, 2013

தெரிந்து கொள்வோமா-74 [ஏமாற்றிடும் விளம்பரங்கள்]

பொதுவாக விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம்…. இன்றைய வணிகங்களில் பெரும்பாலும் உண்மையோ அல்ல்து நேர்மையோ இல்லை என்று அடித்துச் சொல்லலாம்


இதோ சில உதாரணங்கள் :


1. பற்பசை கம்பெனி ஒன்று 50 வருடங்களாக முழங்கி வருகிறது. அவர்களது பற்பசையை உபயோகித்தால் பல் இடுக்குகளில் சிக்கும் உணவுத் துகள்களால் வரும் பற்சிதைவு வரவே வராதாம். முப்பது ஆண்டு காலமாக அதை உபயோகிக்கிறேன். இது வரை எட்டு பற்கள் சிதைவு ஏற்பட்டு ரூட் கெனால் முறையில் துளைத்து, அடைத்து, ஆணிவேரை அழித்து, பல்லை சாகடித்திருக்கிறேன்….


பற்பசை மட்டும் போதாது கூடவே அவர்கள் தயாரித்த பிரஷ் தான் பற்களின் உள்ளே சென்று ஆழமாக ஊடுருவி உணவுத் துகள்களை அகற்றுமாம். போதாததற்கு டென்டல் அசோசியஷன் பரிந்துரையாம். இவர்கள் பரிந்துரை செய்ய எந்த அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை!



2. மற்றொரு விளம்பரத்தில் ஒரு அல்ட்ரா வயலெட் லைட் விளக்கை அடிக்கும்போது கிருமிகள் நெளியுமாம்…. கீழே ஒரு வரி ஓடும்….. கிரியேடிவ் இமேஜினேஷன் என்று….. யோவ்…. வெண்ணைங்களா…… கிருமியைப் பார்க்கணும்னா x5000 நுண்ணோக்கி வேணும்பா…. அம்புட்டும் ஏமாத்தல்.



3. அடுத்தது ஆன்டிசெப்டிக் சோப்பு…. 100 சதவீதக் குளியல்…. நோ டென்ஷன் குளியல்


….. அதிலும் அப்படியே….. ஒரு லென்ஸ் வைத்து காட்டுவார்கள்…. குளிப்பதற்கு முன்னால் நிறைய கிருமிகள் தவழந்து கொண்டு போகும்…. 100 சதவீத குளியல் முடிந்ததும் மீண்டும் லென்ஸ் அந்த இடத்தைக் காட்டும் போது ஒரு கிருமி கூட பாக்கி இருக்கக் கூடாது அல்லவா?





ஆனால் ஒரே ஒரு கிருமி அங்கே கீழே நெளிந்து கொண்டு இருக்கும்…. அடடே …. கிருமிகளின் இனப் பெருக்கம் லாகர்தமிக் பெருக்கம் …… பத்து நிமிடங்களில் பலகோடி கிருமிகள் உண்டாகும்…. இது மைக்ரோ பயாலஜி என்பதெல்லாம் தெரியாதவர்களா நாங்கள்?…..


4. ஒரு விளம்பரத்தில் எதையாவது நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் தருகிறோம் என்று சவால் விடுவார்கள்…. நீங்கள் மெனக்கெட்டு அதை நிரூபிக்க முயன்றால் அது சொட்டை இது சொள்ளை என்று உங்களின் பதிலை விலக்கி விடுவார்கள்….. ஒரு கோடி யாருக்கும் போய் சேராது……


அதே நேரம் நீங்களும் நம்பி அவர்களிடம் இருந்து ஒரு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் கொடுத்து தண்ணீர் பில்ட்டர் வாங்குவீர்கள்…. அது கடைசியில் ஒரு பிளாஸ்டிக் டப்பா மட்டுமே…. கிருமியாவது சாவதாவது…….. மைக்ரோ பயாலஜியின் அடிப்படை விதி…. வைரஸ்களை குளோரினால் கொல்ல முடியாது….. பாக்டீரியாக்களை மட்டுமே கொல்ல முடியும்….


5. அந்த காலத்தில் ராஜா ஸ்னோ என்ற சமாசாரம் கிடைத்து வந்தது. டப்பியில் அடைத்து விற்பார்கள். விக்ஸ் பாட்டில் அளவிற்கு உள்ள ஸ்னோ வின் விலை சுமார் 5 ரூபாய். அது உள்நாட்டுப் பொருள் நிறைய பேர் அதை முகத்தில் பேசாக உபயோகித்து அதன் மேல் பவுடர் பூசிக் கொள்வார்கள். இதனால் பவுடர் சீராகப் பரவி முகத்தில் மேக்கப் பல மணி நேரம் நிற்கும்.


இதைப் பார்த்த ஒரு வெளிநாட்டுக் கம்பெனி, ஜனங்களின் சில மூடத்தனமான நம்பிக்கைகளையும், ஸ்னோ விற்பனையையும் இணைத்து, முகத்தை வெளுப்பாக்கும் பசையை உண்டாக்கினார்கள்.


அதாவது குங்குமப் பூ போட்ட பாலை கர்ப்பிணிகள் குடித்தால் குழந்தை வெள்ளையாகப் பிறக்கும் என்று எந்த மகராஜனோ சொன்னதை நம் ஜனங்கள் கண்மூடித்தனமாக நம்பினார்கள்.



அப்படி நம்பிய ஒரு குடிமகள் என் அம்மா…. நிறைய காசு செலவு செய்து குங்குமப் பூ பால் குடித்து வந்தாலும், கரிக் கட்டையாய் நான் பிறந்தேன்.. ஆனாலும் மனம் தளராமல் என் அம்மா அடுத்த பிரசவத்திற்கும் அதையே செய்தார்.


இது போன்ற மூட நம்பிக்கையை வைத்து ஸ்னோ வின் உள்ளே குங்குமப் பூ கலந்து முகத்தில் தேய்த்தால் 15 நாளில் வெள்ளை ஆவீர்கள் என்று ஒரு வெளி நாட்டுக் கம்பெனி அத்தனை பெண்களுக்கும் குல்லா போட்டுக் கொண்டு இருக்கிறது. அதை அப்படியே ஆண்களுக்கும் கொண்டு வந்து விட்டார்கள்……





6. இன்னொரு கம்பெனி, முகத்தை கழுவ தங்களின் ஆக்டிவேடட் கார்பன் கலந்த பசையை உபயோகிக்கச் சொல்கிறது….காரணம் கரி முகத்தில் உள்ள கழிவுப் பொருள்களை இழுத்துக் கொள்ளுமாம்…. ஹும்…இந்த கரி நற நறவென்று கன்னத்தில் கீறல்தான் போடும் …..


7. நீங்கள் இதுவரை திரவ துணி சோப்பு பற்றி கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?


உங்களை கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தப்பித் தவறி கூட இது பற்றி நீங்கள் கேள்விப் பட்டு விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதை தடுத்து நிறுத்திக் கொண்டு இருக்கின்றன.


வெளிநாடுகளில் இதே கம்பெனிகள் திரவ துணி சோப்பை தயாரித்து விற்கின்றன. ஆனால் இந்தியாவில் அதைக் கொண்டு வந்தால் முதலில் அதை வாங்கி உபயோகிக்கும் நீங்கள் பின்னர் உள்ளூரிலேயே தயாரிக்கும் ஒரு கம்பெனியிடம் இருந்து வாங்கிக் கொள்வீர்கள்.


நஷ்டம் அந்தப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத்தான். பவுடர் சோப்பினால் துவைத்த துணிகள் சில வெளுப்புகளுக்கு அப்புறம் மொட மொடப்பாகப் போவதின் காரணம், பவுடர் சோப்பில் உள்ள கரையாத சோடியம் கார்பனேட் உப்பு நூல் இழைகளுக்கு இடையே தங்கி விடுவதால்தான்.


ஆனால் திரவ சோப்பில் இந்தப் பிரச்சனையே இல்லை…அதில் உப்பு கிடையாது…. முழு திரவமும் தண்ணீரில் கரைந்துவிடும். இழைகளுக்கு இடையே தங்காது…..


இந்த திரவ துணி சோப்பு சந்தைக்கு வந்தால் கிடைக்கும் மார்க்கெட் எவ்வளவு தெரியுமா? மூச்சை அடக்கிக் கொள்ளுங்கள் சும்மார் 20000 கோடி ரூபாய்….இந்திய சந்தை……


- டிமிடித் பெட்கோவ்ஸ்கி

நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்

No comments: