Saturday, November 30, 2013

நல்ல மனம் - 18 வெற்றியை கொண்டாடுவோம்

Saturday, November 9, 2013

மற்றுமோர் அற்புதப்பதிப்பு....

சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும் (பகுதி 1) ஸ்ட்ரிங்க் தியரி பற்றி கொஞ்சம் அடிப்படையாக ஒரு கட்டுரை எழுதினேன். கொஞ்சம் நீளம் அதிகம்தான். விருப்பினால் படியுங்கள். இது பிடித்தது என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில், இதன் இரண்டாம் பகுதியைப் பதிகிறேன். எப்போழுதாவது நீங்கள் இதை யோசித்தது உண்டா? மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் கிலோமீட்டர்களுக்கு (384,403 km) அப்பால் இருக்கும் சந்திரனைத் தனது ஈர்ப்பு விசையால் பூமி இழுத்துவைத்துக் கொண்டிருக்கிறது அல்லவா? இவ்வளவு தூரத்தில் இருக்கும், பெரிய அளவுள்ள சந்திரனைப் பூமி கவர்ந்து வைத்திருக்க வேண்டுமென்றால், அந்த ஈர்ப்பு சக்தி எவ்வளவு வலிமையுள்ளதாக இருக்க வேண்டும் சொல்லுங்கள்? அதுமட்டுமில்லாமல், பூமியில் இருக்கும் எதையுமே தன்னை விட்டுப் பிரிந்து போகாமல் கவர்ந்து வைத்திருக்கிறது புவியீர்ப்பு விசை. பாரசூட்டின் உதவியுடன் ஒருவர் கீழே குதித்தால், பூமி தன்னை எந்த அளவுக்கு இழுக்கிறது என்பதை நன்றாக அறிந்து கொள்வார். அவ்வளவு மிகையான வலுவுடையது ஈர்ப்பு விசை (Gravitational Force) என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தரையில் கிடக்கும் பந்தைத் தனது கையால் எந்த ஒரு சிரமமுமில்லாமல் ஒரு குழந்தை தூக்குகிறது. பூமி, தனது ஈர்ப்பு விசையால் பந்தைத் தரையில் இழுத்து வைத்திருக்கிறது அல்லவா? அந்த ஈர்ப்புவிசை பந்தை இழுத்து வைக்காவிட்டால், பந்து தரையில் நிற்காமல் மேலே பறந்து போய்விடுமல்லவா? இது போலத்தானே, நியூட்டனும் அப்பிள் மரத்திலிருந்து அப்பிள் பழங்கள் ஏன் மேலே பறந்து போகாமல் கீழே விழுகின்றன என்று சிந்தித்து ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். சந்திரனையே இழுத்துவைத்திருக்கும் அளவுக்குப் பெரிய விசையைக் கொண்ட அதே புவியின் ஈர்ப்பு விசைதானே, பந்தையும் இழுத்து வைத்திருக்கிறது. ஆனால், ஒரு குழந்தையால் ஈர்ப்பு விசையை எதிர்த்துப் பந்தைச் சுலபமாகத் தூக்கக் கூடியதாக இருக்கிறது அல்லவா? இப்போது ஈர்ப்பு விசையென்பது மிகமிக வலிமை குறைந்த ஒன்றாக அல்லவா தெரிகிறது? எங்கோ குழப்பமாக இருக்கிறதல்லவா? ஒருபுறம் அதிக வலிமையானதாக இருக்கும் ஈர்ப்புவிசை, இன்னொருபுறம் மிக மோசமான அளவுக்கு வலிமை குறைந்ததாக இருக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? விஞ்ஞானிகள் 'தலையால் மண்கிண்டி நீர் எடுக்கும்' பிரயத்தனமாக இவ்வளவு காலமும் இந்தக் கேள்விக்கு இருட்டிலேயே பதிலைத் தேடிக் கொண்டிருந்தனர். இப்பொழுதுதான் வெளிச்சம் மெல்லத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய போதுதான், எப்பொழுதும் மோதிக் கொள்ளும் ஆன்மீகமும், அறிவியலும் இணைந்து ஒரு புள்ளியில் ஒடுங்கும் நிலைக்கு வருவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இதைப் பற்றி விபரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமும் கூட. அறிவியலும், ஆன்மீகமும் தமக்கென வேறு வேறான பாதைகளைக் கொண்டவை. இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. ஆன்மீகம் இயங்கும் தளத்தில் அறிவியலும், அறிவியல் இயங்கும் தளத்தில் ஆன்மீகமும் இயங்குவதில்லை. இயற்பியல் விதிகள், தர்க்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தளத்தில் அறிவியலும், நம்பிக்கை என்னும் தளத்தில் ஆன்மீகமும் இயங்குகின்றன. ஆனால் இவை இரண்டுமே சமயங்களில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. ஆன்மீகம் அறிவியலின் தளத்திற்கோ, அறிவியல் ஆன்மீகத்தின் தளத்திற்கோ நுழைய முற்படும் போது இந்த மோதல்கள் ஏற்படுகின்றன. சூரியன், பூமியைச் சுற்றுகின்றது என்று நம்பிக்கையை முன்வைத்து மதங்களால் கருத்துச் சொல்லப்பட்ட போது, கோபெர்னிகஸ் (Nocolaus Copernicus) அதை மறுத்து, சூரியனைத்தான் பூமி சுற்றுகின்றது என்று கூறியதில் ஆரம்பித்து, கலிலியோ, டார்வின் என இந்த மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. இவை படிப்படியாக அதிகரித்து, 'பிக் பாங்க்' (Big Bang) என்று சொல்லப்படும் அண்டத்தின் பெருவெடிப்பு வரை வந்திருக்கின்றது. அண்டத்தின் (Universe) தோற்றம், ஒரு மிகச்சிறிய புள்ளி பெரிதாக வெடித்ததால் ஏற்பட்டது என்று சொல்வதை மதங்களும் ஆன்மீகமும் இன்றுவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றன. இதை ஏற்றுக் கொண்டால் வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு எதிராக நடந்து கொள்வதாகிவிடும். 'கடவுள் வானத்தையும், பூமியையும் படைத்தார். பூமி வெறுமையுமாகவும், இருளுமாகவும் இருந்தது. கடவுள் ஒளி உண்டாகட்டும் என்றார். வெளிச்சம் உருவாகியது. பின்னர் ஜீவராசிகளையும், மனிதனையும் உருவாக்கினார்'. பூமியும், அண்டமும், மனிதனும் உருவாகிய விதத்தை வேத நூல்கள் இப்படித்தான் சொல்கின்றன. இந்தக் கருத்தையே உலகில் உள்ள அனைத்து ஆன்மீகவாதிகளும் நம்புகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு பொதுமைக் கருத்தாக இது முதன்மை வகிக்கிறது. ஆனால், குறுகிய காலத்தில் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்த அறிவியல், இந்தக் கருத்துக்கு எதிராகத் திடீரென ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுக் கொண்டது. 'பூமியோ, சூரியனோ, அண்டமோ கடவுளால் உருவாக்கப்பட்டவை அல்ல. சிறு புள்ளியாக இருந்த ஒரு பருப்பொருள், தவிர்க்க முடியாத ஒரு கணத்தில் பெருவெடிப்பாக (Big Bang) வெடித்ததன் மூலம் உருவாகியதுதான் அண்டம், சூரியன், பூமி எல்லாமே என்று நவீன அறிவியல் கூறியது. அண்டத்தைப் படைத்தது கடவுள்தான் என்று சொல்லும் ஆன்மீகத்தின் முன்னால், இந்தக் கருத்து மிகப்பெரிய தடைக் கல்லாக வந்து விழுந்தது. மதங்களின் வேத நூல்களில் சொல்லப்பட்டவைகளை, இந்தக் கருத்து மறுக்கின்றது என்ற அளவில், இதற்கு என்ன பதில் சொல்வது என்று மதங்கள் திகைத்தாலும் விரைவில் சுதாரித்துக் கொண்டன. அறிவியல் சொல்லிய இந்தக் கருத்துக்கு எதிரான, மிகச் சரியான ஒரு வாதத்தை மதங்களும் முன்வைத்தன. அந்த வாதம், அறிவியலுக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. 'மிகச் சிறிய ஒரு பருப்பொருள் பெரிதாக வெடித்ததனால் இந்த அண்டம் தோன்றியது என்றால், அந்த மிகச் சிறிய பருப்பொருளை உருவாக்கியது யார்? ஒரு பொருள் உண்டு என்றால், அதைப் படைத்தவன் ஒருவன், அல்லது ஒரு சக்தி நிச்சயம் இருக்க வேண்டும் அல்லவா? ஆகவே அண்டத்தையே உருவாக்கும் அளவுள்ள சக்தி வாய்ந்த அந்தச் சிறிய பருப்பொருளையும் ஒருவர் படைத்திருக்க வேண்டும். அதைப் படைத்தவனை அல்லது ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்கிறோம்' என்று மிக எளிமையாக, தனது வாதத்தை முன்வைத்தது ஆன்மீகம். இந்த வாதத்துடன் எல்லாமே முடிந்து போனது. மிகச் சரியானதும், யாரும் முறியடிக்க முடியாததுமான பதிலடியாக இது இருந்தது. சமீபத்தில் கூட, தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான ஒருவர், இலக்கியப் பாராட்டு விழாவொன்றில் இந்தக் கருத்தைக் கூறியுமிருந்தார். மறுக்கவே முடியாத இந்த வாதத்துக்கு அறிவியலால் முதலில் பதில் கூறவே முடியவில்லை. 'பிக் பாங்க்' பற்றிப் பேசும் போது, ஆன்மீகவாதிகளால் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அறிவியலாளர்கள் குழம்ப ஆரம்பித்தனர். ஆனால், இந்த குழப்பமும் சிலகாலம்தான் நீடித்தது. எந்தக் கேள்விக்கு அறிவியலால் பதில் கூற முடியாது என்று நம்பப்பட்டதோ, அதற்கு அறிவியல் ஒருநாள் பதில் கூறியது. தன்னை நிதானப்படுத்திக் கொண்ட அறிவியல், "அண்டம் உருவாகக் காரணமான 'மிகச் சிறிய பருப்பொருளை' யாராவது ஒருவர்தான் உருவாக்க வேண்டும், அது தானாக உருவாக முடியாது என்று சொல்வதையும், அதைக் கடவுள்தான் உருவாக்கினார் என்பதையும் உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால், இப்போது கடவுளை யார் உருவாக்கினார்கள் என்ற கேள்வி மிஞ்சுகிறதல்லவா? இந்தக் கேள்விக்கு, 'அப்படி இல்லை, கடவுளை யாரும் உருவாக்கவில்லை. கடவுளை யாரும் உருவாக்கவும் முடியாது. அவர் தானே தோன்றியவர்' என்று பதில் சொல்லப்பட்டால், அண்டம் உருவாகக் காரணமான பருப்பொருளும் ஏன் தானே தோன்றியிருக்க முடியாது?" என்று தனது எதிர் வாதத்தை முன்வைத்தது. இதற்கு மேல் இந்த விசயத்தில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு தர்க்க ரீதியான பதிலாக அது இருந்தது. அறிவியலுக்கு எதிராக ஆன்மீகம் ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது. "நேற்று ஒன்றை உண்மையென்று அறிவியல் சொல்லிவிட்டு, இன்று வேறு ஒன்றை உண்மையென்று அதுவே மறுத்துச் சொல்கிறது. இன்று உண்மையென்று சொல்லப்படுபவையும் நாளை மறுக்கப்படாலாம். நாளை வேறு ஒன்று உண்மையாகலாம். எனவே அறிவியல் சொல்லும் எதுவும் நிரந்தர உண்மை கிடையாது" என்கிறது ஆன்மீகம். இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். ஆனால் அறிவியல், "இன்று இதுதான் உண்மையென்று தெரிந்துவிட்டால், நேற்றுச் சொன்னதை மறுத்து ஒதுக்க அறிவியல் தயாராக இருக்கிறது. ஆனால் மதம் அதற்கு எப்போதும் தயாராகவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் எழுதியவற்றை இன்றும் உண்மை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது. மதம் தன் கருத்துகளைக் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றத் தயங்குகிறது" என்று மதத்திற்கு எதிராக கேள்வியைத் திருப்பிக் கொள்கிறது. அத்துடன் அறிவியல் தன் முடிவுகளுக்கான தன்னிலை விளக்கம் ஒன்றையும் கொடுக்கிறது. "அறிவியல் தனது கண்டுபிடிப்புகளின் முடிவுகளைக் கோட்பாடுகள் (Theory), விதிகள் (Rule) என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. கோட்பாடுகள் எப்போதும் மாறக் கூடியவை. இன்று ஒரு கோட்பாடு உண்மையாக இருக்கும் போது, நாளை இன்னுமொரு கோட்பாடு வந்து அதை இடம் மாற்றும். ஆனால் விதிகள் அப்படியானவை அல்ல. விதிகள் எப்போதும் கணிதச் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாண்மையான கணிதச் சமன்பாடுகள் மாற்றமில்லாதவை. என்றுமே உண்மையானவை. 1900 ஆண்டுகளுக்கு முன்னர் பைதகரஸினால் (Pythagoras) முன்வைக்கப்பட்ட கணிதச் சமன்பாடு இன்று கூட மாற்றமில்லாமல் இருப்பதை இதற்கு முக்கிய உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். எனவே கோட்பாடுகளாகச் சொல்லப்படும் அறிவியல் முடிவுகளை விடக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு விதிகளாகச் சொல்லப்படும் முடிவுகளில் உண்மை முழுமையாக இருக்கும்". அறிவியல் கூறுவது போல, இயற்பியலாளர்களால் உருவாக்கப்பட்ட கணிதச் சமன்பாடு ஒன்றுதான் எதிரெதிராக மோதிக் கொண்டிருக்கும் அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒரு புள்ளியில் ஒட்ட வைக்க முயற்சிக்கிறது. அதுதான், இன்று எல்லாராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படும் 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory) ஆகும். நாம் ஸ்ட்ரிங்க் தியரிக்குள் நுழைவதற்கு முன் மிகத் தீவிரமான, சிக்கலான இயற்பியலுக்குள் நாம் காலடி வைக்க வேண்டும். புரிவதற்குச் சிரமமாக அவை இருந்தாலும், இன்றைய காலத்தில் அனைவருமே தெரிந்திருக்க வேண்டியவை. "சார்....! மூடி வைத்துவிட்டு எங்க போறீங்க? கொஞ்சம் நில்லுங்க........! நான் ஒன்றும் இயற்பியல் பாடம் எடுக்கப் போவதில்லை. நீங்கள் பயப்படவே தேவையில்லை. நான் என்னதான் சொல்கிறேன் என்று கொஞ்சம் அமைதியாகப் படித்துத்தான் பாருங்களேன்! இதுவரை இயற்பியல் பாடங்களாக இருந்த இவை இப்போது ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயங்களாக ஆகிக் கொண்டு வருகின்றன. அதனால் பொறுமையாக வாசியுங்க. சமீபத்தில் கூட 'கடவுள் துகள்' (Higgs Boson) கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இயற்பியல் சம்பவம், உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் பேசப்பட்ட ஒரு விசயமாகவில்லையா? அது போல இதையும் நினைச்சுக்கோங்க". நவீன விஞ்ஞானம் தனது வலது கையில் 'குவாண்டம்' (Quantum) என்னும் அணுக் கருவுக்குள் இருப்பவை பற்றிய ஆராய்ச்சியையும், இடது கையில் 'யூனிவேர்ஸ்' (Universe) என்னும் அண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு, இரண்டையும் எப்படி ஒன்றாக இணைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கும் ஒரு கணித விதியை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற 'ஐன்ஸ்டைன்' (Einstein) கூடத் தனது இறுதி இருபது வருட காலங்களை அப்படி ஒரு கணிதச் சமன்பாட்டை உருவாக்கவே செலவிட்டார். எப்போதும் கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு அதைச் சிந்தித்துக் கொண்டிருப்பதே அவர் வேலையாயிற்று. இறுதியில் அப்படி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாமலே அவர் இறக்கவும் நேரிட்டது. "கண்டுபிடிக்க முடியாத ஒரு கணிதச் சமன்பாட்டை அவர் ஏன் கண்டுபிடித்தே தீர வேண்டும் என நினைத்தார்? அப்படி ஒரு சமன்பாடே இல்லாமல் இருக்கலாம் அல்லவா?" என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஐன்ஸ்டைன் அப்படி நினைக்கவில்லை. "அணுக்களும், அண்டமும் 'பிக் பாங்க்' என்னும் வெடிப்பு நிகழும் கணத்திற்கு முன்னர் ஒன்றாக, ஒரே புள்ளியாக, சமப்படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றன. அந்தக் கணத்தில் இந்தச் சக்திகள் எல்லாமே ஒன்றாக ஒரு கணித விதியின் கீழ் சேர்ந்து இருந்திருக்கின்றன. அதனால் அப்படி ஒரு கணிதச் சமன்பாடு நிச்சயம் இருந்தே தீர வேண்டும்" என்று நம்பினார். அந்தச் சமன்பாட்டைத்தான் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' (Theory of Everything) என்பார்கள். பிணைக்கப்பட்டிருக்கின்றன. திட அணுக்கரு விசை (Strong Nuclear Force), திடமற்ற அணுக்கரு விசை (Weak Nuclear Force), மின்காந்த விசை (Electromagnetic Force), ஈர்ப்பு விசை (Gravitational Force) என்பவைதான் இந்த நான்கு அடிப்படை விசைகளுமாகும். இந்த நான்கு அடிப்படை விசைகளினாலேயே அணுக்கள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் என அண்டம் முழுவதுமே பிணைக்கப்பட்டிருக்கின்றன. 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், 'பிக் பாங்' என்னும் பெருவெடிப்பு நடந்தது. இந்தப் பெருவெடிப்பின் முன்னால் மிகச் சிறிய ஒரு புள்ளி போன்ற ஒன்றாகத்தான் அண்டம் இருந்திருக்கிறது. அண்டம் சிறியதாக இருந்த போது, மேலே குறிப்பிட்ட நான்கு விசைகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, சமப்படுத்தபட்ட நிலையில் விசையற்று அமைதியாக இருந்திருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அந்தப் பருப்பொருளில் இருந்து ஈர்ப்புவிசை முதலில் பிரிந்தது. அதைத் தொடர்ந்து திட அணுக்கரு விசையும் அதிலிருந்து விலகியது. அதனால் ஏற்பட்ட உந்தலினால் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. வெடிப்பினால் 'வெளி' (Space) உருவாகப் போகும் கணத்தில் ஆறு விதமான குவார்க்குகள் (Quarks) உருவாகின. அதைத் தொடர்ந்து, திடமற்ற அணுக்கரு விசையும், மின்காந்த விசையும் பிரிந்தன. இப்போது அடிப்படையான நான்கு விசைகளும் தனித்தனியாகப் பிரிந்து நின்றன. இந்தக் கணத்தில் ஆறு விதமான லெப்டான்கள் (Leptons) உருவாகின. ஆறு விதமான குவார்க்களில் மேல்குவார்க் (Up Quark), கீழ்க்குவார்க் (Down Quark) ஆகிய இரண்டும் சேர்ந்து ப்ரோட்டான்களையும், நியூட்ரான்களையும் உருவாக்கின. அண்டம் மிகப் பெரியதாக விரிவடைந்தது. இவையெல்லாம் ஒரு செக்கனுக்குள் நடந்து முடிந்தது. அண்டமும் பாரிய வடிவில் உருவெடுத்தது. 'பிக் பாங்க்' பெருவெடிப்பின் அடுத்த கட்ட நிலையில் தோன்றியவை குவார்க்குளும். லெப்டான்களும்தான். இவற்றின் பெயர்களைப் பார்த்து நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. அணு ஒன்றைப் பிரித்துக் கொண்டு போகும்போது, அதனுள் காணப்படும் உப அணுத்துகள்கள்தான் (Subatomic Particles) இவை. அண்டம் தோன்றும் போது எவை உருவாகியனவோ, அவைதான் அணுவுக்குள்ளும் இருக்கின்றன. அணு என்பதைப் பிரிக்க முடியாது என்னும் கருத்து ஆரம்பத்தில் விஞ்ஞானிகளிடையே இருந்திருக்கிறது. ஆனால் இலத்திரன், புரோட்டான், நியூட்ரான் என்று அது பிரிக்கப்பட்டது. தொடர்ந்து நியூட்ரானும், புரோட்டானும் பிரிக்கப்பட்டன. அப்படிப் பிரித்துப் பார்த்த போது, அவை இரண்டுக்குள்ளும் இருந்தவை ஒரேவிதமான குவார்க்குகள் மட்டும்தான். அதாவது பூமியில் உள்ள அனைத்துமே குவார்க்குகளால் உருவானவைதான். இந்த நிலையில் நான்கு அடிப்படை விசைகளையும் இணைத்து ஒரே சமன்பாட்டில் கொண்டுவர முடியும் என்ற சிந்தனை உருவாகியது. ஆனால் கொண்டுவர முடியயாமல் போயிற்று. ஐன்ஸ்டைனில் ஆரம்பித்த இந்தத் தேடல் அதற்கு அப்புறம் அனைத்து இயற்பியலாளர்களையும் ஆட்டிப்படைத்தது. இதைக் கண்டுபிடிப்பதே தங்கள் நோக்கம், தங்கள் வாழ்வு என்று பலர் பாடுபட்டார்கள். ஒரு வகையில் இந்தக் கணிதச் சமன்பாடு சிருஷ்டியின் ஆரம்ப முடிச்சு என்றே சொல்லலாம். இதைக் கண்டுபிடித்துவிட்டால், அண்டத்தின் சிருஷ்டி இரகசியம் மொத்தமாகப் புரிந்துவிடும். இந்த நிலையில் மின்காந்த விசையையும், திடமற்ற அணுக்கரு விசையையும் ஒன்றாக இணைத்து மூன்று இயற்பியலாளர்கள் சாதனை செய்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் சலாம் (Abdul Salam), ஷெல்டன் கிளாஸ்கோவ் (Sheldon Glashow), ஸ்டீபன் வைன்பேர்க் (Steven Weinberg) ஆகிய மூவருக்கும் இதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது இயற்பியலாளர்களிடையே ஒரு நம்பிக்கையையும் உருவாக்கியது. அதனால் தொடர்ந்து கடுமையாக முயற்சித்தனர். ஆனால் ஏதோ ஒரு தவறு நேர்ந்து கொண்டே இருந்தது. ஈர்ப்பு விசையை மற்ற விசைகளுடன் இணைக்க முடியாமல் இருந்தது. அப்போதுதான், ஈர்ப்பு விசையையின் வலிமை, வலிமையற்ற தண்மைகள் பற்றிய சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. ஒரு வகையில் பார்த்தால் இந்த அண்டத்தில் உள்ள எல்லாமே ஈர்ப்பு விசையினால் ஒன்றையொன்று கவர்ந்தபடியே இருக்கின்றன. மிகவும் வலிமையான சக்தியாக அது இருக்க வேண்டிய நிலையில், வலிமையற்றதாகக் காணப்படுகிறது. அண்டத்தில் உள்ள வெற்றிடமெங்கும் இந்த ஈர்ப்பு விசை பரவியிருக்கிறது. 150 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பூமியைத் தனது ஈர்ப்பு விசையினாலேயே இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறது சூரியன். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் இருப்பதெல்லாமே மிகப்பெரிய வெற்றிடம். இந்த வெற்றிடத்தினூடாக எப்படிப் பூமியைச் சூரியன் இழுக்கிறது? எதைக் கொண்டு இழுக்கிறது? இழுக்கப் பயன்படுவது எதுவானாலும், அது பூமியில் இருந்து சூரியன் வரை 150 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்க வேண்டுமல்லவா? அதைத்தான் கிராவிட்டான்கள் (Graviton) என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இந்த கிராவிட்டான் என்பது ஒரு போஸான் (Boson) வகையைச் சேர்ந்தது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஹிக்ஸ் போஸான்' போல என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிராவிட்டானின் ஏதோ ஒரு செயல்பாட்டினால்தான், விசைகளை ஒன்றாக்கும் சமன்பாடு சாத்தியமாகவில்லை என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால் நவீன இயற்பியல், கிராவிட்டானின் இயக்கம் வயலினில் அல்லது கிட்டாரில் இருக்கும் அதிர்விழையில் (Strings) ஏற்படுத்தும் அதிர்வுகளின் தொழிற்பாடு போன்றதாக இருக்கிறது என்று கண்டுபிடித்தது. இந்த அதிர்விழைத் தண்மையினால், கிராவிட்டான்கள் இடம்விட்டு இடம் நகர்வதாலேயே வலிமையற்றதண்மை ஏற்படுகிறது என்ற முடிவுக்கும் வந்தது. விஞ்ஞானிகளின் இந்த முடிவுகள் எல்லாம் ஏதோ ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. முழுமையான கணிதக் கணிப்பீடுகளை வைத்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. கணித முடிவுகள் என்றுமே மாறாதவை. அணுக்கருவுக்குள் இருக்கும் நியூட்ரான், புரோட்டான் இரண்டையும் பிரித்துப் பார்த்த போது அவற்றினுள் ஒரே விதமான குவார்க்குகள் இருந்தன அல்லவா? நவீன இயற்பியலில், குவார்க்குகளுக்குள் என்ன இருக்கும் என்று ஆராய்ந்த போது கிடைத்த முடிவுகள் ஆச்சரியமானவை. குவார்க்குகளுக்குள்ளும் கிராவிட்டான் போல, மிகமிகச் சிறிய அதிர்விழைகள் (Strings) அதிர்ந்து கொண்டிருந்தது புரிந்தது. அதாவது அணுவைக் கடைசி வரை பிரித்து இறுதியில் அதனுள் என்ன இருக்கிறதென்று பார்த்தால் அங்கு ஒன்றுமே இல்லை. அங்கு இருப்பது எல்லாம் இசை மட்டும்தான். நூண்ணிய இழைகள் அதிர்வதினால் ஏற்படும் இசை மட்டுமே அங்கு காணப்படுகிறது. நான், நீங்கள், கல், நாற்காலி என அனைத்துமே இசையினால் உருவாக்கப்பட்டவர்கள். என்ன நம்புவதற்கு கடினமாக இருக்கிறதா? ஆனால் இது உண்மை. அணுவுக்குள் இருக்கும் உப அணுத்துகள்கள் கூட இந்த அதிர்விழைகளாகத் துடித்துக் கொண்டிருக்கின்றன. அண்டம் முழுவதும் பரவியிருக்கும் கிராவிட்டான்களும் அதிர்விழைகளாய் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதாவது எங்கும் இசை. எங்கும் நாதம். 'அண்டத்தில் இருப்பது பிண்டத்தில்' என்று சொல்வது போல, அணுமுதல் அண்டம் வரை இசையின் இராச்சியம் நடந்து கொண்டிருக்கிறது. நமது ஒட்டு மொத்த அண்டமும் ஓயாத ஒரு சிம்பனி (Symphony) போல முழங்கிக் கொண்டிருக்கிறது. "நாத விந்து கலாதி நமோ நம" என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் ஞாபகம் வருகிறதல்லவா? தாள லயத்துடன் சிவனால் ஆடப்படும் நடனம்தான் இந்தப் பிரபஞ்சம் என்ற கருத்து நம்மிடையே உள்ளதல்லவா? 'ஓம்' என்னும் ரீங்காரத்தில்தான் பிரபஞ்சமே இயங்குகிறது என்று ஆன்மீகம் சொல்கிறது அல்லவா? இவையெல்லாமே இங்கு சரியாக பொருந்துகின்றன. அது மட்டுமில்லை, "ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது" என்று பைபிள் சொல்கிறதும் அதுவும் இங்கு பொருந்துகிறது. வார்த்தை என்பதும் ஒலிதானே! அண்டம் இசையினால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு அறிவியல் வந்துவிட்டது. இதை ஆன்மீகம் எப்போதோ சொல்லியிருக்கிறது. அறிவியல், ஆன்மீகம் இரண்டும் இந்தப் புள்ளியில் ஒன்றாகச் சந்திக்கின்றன. அறிவியலின் உச்சியில் இருந்த நம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் எப்படியோ அறிந்து கொண்டு அவற்றை ஆன்மீகத்தினூடாக நமக்கு விளக்க்க முயற்சித்தும் இருக்கலாம். அணு முதல் அண்டம் வரையுள்ள எல்லாமே அதிர்விழைகளால் (Strings) உருவாக்கபட்டன என்பதை மையமாக வைத்து ஸ்ட்ரிங்க் தியரி என்னும் புதிய கோட்பாடு உருவாகியது. அந்தக் கோட்பாட்டின் மூலம் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' என்னும் கணிதச் சமன்பாட்டை தீர்க்க முயன்ற போது எல்லாமே சுலபமாகப் பொருந்தின. சரிசெய்யவே முடியாது என்று நினைத்த சமன்பாட்டை இதன் மூலம் சரிசெய்ய முடிந்தது. இயற்பியலாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஸ்ட்ரிங்ஸை அடிப்படையாக வைத்து கணிதச் சமன்பாடு ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே அனைத்து விசைகளையும் ஒன்றிணைக்கும் சமன்பாடு என்ற முடிவுக்கும் வந்தனர். அந்த வேளையில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஸ்ட்ரிங்க் தியரியை வைத்து இன்னுமொரு கணிதச் சமன்பாடு உருவாகியது. அதன் பின்னர் இன்னுமொன்று. இப்படிப் படிப்படியாக ஐந்து சமன்பாடுகள் ஸ்ட்ரிங்க் தியரியால் உருவாக்கப்பட்டன. எல்லாமே சரியான சமன்பாடுகள்தான். அனைத்தும் நான்கு அடிப்படை விசைகளை இணைத்து உருவாக்கப்பட்டவைதான். இப்போது இயற்பியலாளர்கள் குழம்ப ஆரம்பித்தனர். கணித முடிவு என்றாலே, அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு சிக்கலுக்கு எப்படி ஐந்து தீர்வுகள் இருக்க முடியும்? இருந்தால் ஒரேயொரு கணிதச் சமன்பாடு மட்டும்தான் இருக்க முடியும். உண்மை என்பது ஒன்றுக்கு மட்டும்தான் சாத்தியமானது. இப்படி ஐந்து சமன்பாடுகள் எப்படிச் சாத்தியம் என்று குழம்பிப் போனார்கள். இந்த ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளைக் கண்டுபிடித்தவர்களில் அசோக் சென் (Ashoke Sen) என்னும் கல்கத்தாக்காரரும் ஒருவர். ஒரு உண்மைக்கு ஐந்து தீர்வுகள் இருக்க முடியாது என்னும் அடிப்படையில் இந்தச் சிக்கல்களுக்கும் 'எம் தியரி' (M Theory) என்னும் பெயரில் ஒரு முடிவு வந்தது. கிராவிட்டான்கள் மூலம் கிடைக்கும் ஈர்ப்பு விசை பெரிதாக இருந்தாலும் ஏன் இவ்வளவு வலுவற்றதாக இருக்கிறது என்ற சிந்தனை மூலம் இந்த 'எம் தியரி' பிறந்தது. 'எம் தியரி' மூலம், உருவாக்கப்பட்ட ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளும் வேறு வேறல்ல, எல்லாமே ஒன்றுதான் என்று நிரூபிக்கப்பட்டது. இறுதியாக ஒரே ஒரு கணிதச் சமன்பாடுதான் உண்மை என்ற முடிவும் கிடைத்தது. இந்த முடிவுகளுக்கு எப்படி இயற்பியலாளர்கள் வந்தார்கள்? ஏன் ஐந்து விதமான ஸ்ட்ரிங் தியரிகள் உருவாகின என்று பார்க்கப் போனால், பாரலல் யூனிவேர்ஸ் (Parallel Universe), மல்டிவேர்ஸ் (Multiverse), பல்பரிமாணங்கள் (Multidimensions), மெம்பிரான் (Membrane) என்று மிக நவீன இயற்பியலுக்குள் நான் செல்ல வேண்டும். இந்தக் கட்டுரையின் நீளம் கருதி அவற்றை இங்கு சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். உயிர்மை ஆசியர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இன்னுமொரு முழுமையான கட்டுரையாக இவற்றை நான் உங்களுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். -Raj Siva

மிக மிக மிக அருமையான பதிவு.... இப்போதுதான் விஞ்ஞானம் சரியான பாதையில் பயனிப்பதாக நான் எண்ணுகிறேன்...

இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்) -ராஜ்சிவா

20ம் நூற்றாண்டில் நம்பவே முடியாத அறிவியல் விதிகளை வெளியிட்டு, உலகையே நிமிர்ந்து உட்கார வைத்தவர் அல்பேர்ட் ஐன்ஸ்டைன். சாத்தியமே இல்லை என்று நினைக்கும் பல இயற்பியல், கணிதக் கோட்பாடுகளை அவர் வெளியிட, திகைத்துப் போனது உலகம். நேரம் (Time) ஒரு வெளியில் (Space) இயங்கும் போது சுருங்குகிறது என்றும், ஒளியானது ஈர்ப்பு விசையினால் வளைகிறது என்றும் ஆச்சரியமான இயற்பியல் கோட்பாடுகளை ஐன்ஸ்டைன் சொன்னார். இவற்றை எல்லாம் பின்னர் பரீட்சித்துப் பார்த்த போது உண்மை என்று தெரிய வந்தது. ஐன்ஸ்டைன் மேல் அதீத நம்பிக்கையும், மரியாதையும் உலகெங்கும் உருவாகியது. இவர் சொன்னவை எதுவுமே தப்பாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு சக விஞ்ஞானிகள் வர ஆரம்பித்தனர். ஐன்ஸ்டைன் வெளியிட்ட வேறொரு கோட்பாடுதான் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' (Theory of everything) என்பதாகும். அதாவது, பெரிதாக விரிந்திருக்கும் அண்டத்திற்கும், சிறிதாக இருக்கும் அணுவுக்கும் அடிப்படையாக இருக்கும் விசைகள் (forces) அனைத்தும் ஒரே கணிதச் சமன்பாட்டில் அடங்கும் என்று அந்த விதி சொன்னது. ஐன்ஸ்டைன் உயிருடன் இருக்கும் வரை அப்படி ஒரு சமன்பாட்டை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் ஐன்ஸ்டைனில் இருக்கும் நம்பிக்கையினால், அப்படி ஒரு கணிதச் சமன்பாடு நிச்சயம் இருக்குமென, அந்தக் கணிதச் சமன்பாட்டைத் தேடிப் புறப்பட்டனர் இளம் நவீன இயற்பியலாளர்கள். 


இறுதியாக அந்தச் சமன்பாட்டை நவீன இயற்பியலாளர்கள் கண்டும் பிடித்தனர். ஆனால், ஒரு சமன்பாடு மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், ஐந்து சமன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கணிதச் சமன்பாடுகள் பெரும்பாலும் ஒரு மாறாத விதிக்கு (Law) உட்பட்டே அமைகின்றன. ஒரு விதிக்கு உட்பட்டு அமையும் கணிதச் சமன்பாடு, எந்தக் காலத்துக்கும் மாறாமல் உண்மையானதாக இருக்கும். உண்மை எப்போதும் ஒன்று என்பதால், ஒரு விதிக்கு எப்போதும் ஒரு கணிதச் சமன்பாடே இருக்க முடியும். ஆனால் இங்கு ஐந்து சமன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் குழப்பமே அதிகரித்தது. காரணம் அந்த ஐந்து சமன்பாடுகளும் சரியானதாக இருந்தன. கண்டுபிடிக்கவே முடியாது என்று நம்பிய 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' என்னும் கோட்பாட்டிற்கு முடிவு கிடைத்தாலும், அந்த முடிவில் ஒரு குழப்பம் இருந்தது. ஒரு சமன்பாட்டைத் தேடிப் போகும் போது, கிடைத்ததோ ஐந்து சமன்பாடுகள். அந்தச் சமன்பாடுகளின் அடிப்படைக் கோட்பாட்டின் பெயர்தான் 'ஸ்ட்ரிங் தியரி' (String Theory) என்பதாகும். அதாவது அணுவுக்குள் இருக்கும் துகள்களைப் பிரித்துப் பார்த்தால், அங்கே இறுதியாகக் காணப்படுவது 'அதிர்ந்து கொண்டிருக்கும் நுண்ணிய இழைகள்தான்' என்கிறது ஸ்ட்ரிங் தியரி. அத்துடன் அணு முதல் அண்டம் வரை எங்கும் அதிரும் இழைகளே பரவியிருக்கின்றன என்றும் சொல்கிறது ஸ்ட்ரிங் தியரி. 

இதுவரை நாம் டிசம்பர் மாத உயிர்மை இதழில் பார்த்திருந்தோம். இந்தச் சிக்கலை விஞ்ஞானிகள் எப்படி எதிர் கொண்டார்கள்? அதன் மூலமாக அவர்கள் கண்டுகொண்ட புதிய முடிவுகள் என்ன? என்பவற்றைத்தான் நாம் இப்போது விரிவாகப் பார்க்கப் போகின்றோம். ஸ்ட்ரிங் தியரியின் சிக்கல் முடிச்சு அவிழ்க்கப்பட்ட போது, நமக்குக் கிடைத்த அனைத்துமே பிரமிப்பூட்டும் ஆச்சரியங்கள்தான். நம்பவே முடியாத கோட்பாடுகள் அவை. நமது அடிப்படை நம்பிக்கைகளைக் கூட அசைத்துப் பார்க்கும் முடிவுகளாக அவை இருந்தன. 'எம் தியரி' (M Theory), பல்பரிமாணங்கள் (Multi dimensions), மெம்பிரான் (Membrane), பாரலல் யூனிவேர்ஸ் (Parallel Universe), மல்டிவேர்ஸ் (Multiverse) எனப் புதிய பிரமிப்பூட்டும் ஆச்சரியங்களாக அவை இருந்தன. அவை எல்லாவற்றையும், ஒவ்வொன்றாக முடிந்த அளவுக்கு நாம் நாம் பார்க்கலாம்.

பிக் பாங்க் வெரு வெடிப்பினால் உருவான 'யூனிவேர்ஸ்' என்று அழைக்கப்படும் அண்டத்தில், பில்லியன் பில்லியன் அளவில் காலக்ஸிகளும், நெபுலாக்கள் என்றழைக்கப்படும் தூசுப்படலமும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அண்டம் முழுவதும் பரவியிருக்கின்றன. ஈர்ப்பு விசை ஏற்படுவதே கிராவிட்டான்கள் (Graviton) என்னும் துகள்கள் மூலம்தான். அதனால் இந்த கிராவிட்டான்கள் பிரபஞ்ச விண்வெளியெங்கும் பரவி, ஈர்ப்புவிசையாக மாறி இருக்கின்றன. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளும், துகள்களும் மட்டுமில்லாமல் கிராவிட்டான்களும் கூட அதிர்விழைகளாகவே (Strings) அதிர்ந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் அடிக்கடி பார்க்கும் 'ரப்பர் பாண்ட்' (Rubber Band) எப்படி இருக்குமோ, அதேபோல மிக மிக நுண்ணிய வடிவத்தில் இந்த அதிர்விழைகள் காணப்படும். ஒரு ரப்பர் பாண்ட் வட்ட வடிவமாகவும் இருக்கும். அதே நேரத்தில் இடையில் அறுத்து விட்டால் இரண்டு நுனிகளையுடைய ஒரு நேரான வடிவத்திலும் இருக்குமல்லவா? அது போல, இந்த அதிர்விழைகளும் 'மூடிய இழை' (Closed String), 'திறந்த இழை' (Open String) என இரண்டு விதமான வடிவங்களில் காணப்படுகின்றன. கிராவிட்டான்கள் மூடிய வட்டவடிவமான அதிர்விழைகளாகவும், ஏனைய அனைத்தும் திறந்த அதிர்விழைகளாகவும் இருக்கின்றன. 

இந்த ஸ்ட்ரிங்குகளை (அதிர்விழைகளை) மையமாக வைத்து உருவாகியதுதான் ஸ்ட்ரிங் தியரியாகும். ஆனால் உருவாகியதோ ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளாகும். அந்த ஐந்து தியரிகளுமே உண்மையானவை. தப்பே இல்லாதவை. இங்குதான் குழப்பம் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஏதோ தப்பு நடக்கின்றது என்பதை நவீன இயற்பியலாளர்கள் நன்றாகப் புரிந்து கொண்டனர். இறுதியில் அந்தத் தப்பும் என்னவென்று கண்டுபிடிக்கப்பட்டது. எட்வார்ட் விட்டன் (Edward Witten) என்பவர் 1990 இல் இந்த ஐந்து சமன்பாடுகளையும் ஒன்று சேர்த்துப் புரட்சிகரமான கோட்பாடொன்றை வெளியிட்டார். அவர் கூறிய கோட்பாடு 'எம் தியரி' (M theiry) என்ற பெயரையும் பெற்றுக் கொண்டது. ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளுக்கும் பொதுவாக ஒரே சமன்பாட்டுடன் அந்த எம் தியரியும் உருவாக்கப்பட்டது. 

விட்டன் வெளியிட்ட 'எம் தியரி' சொல்வது இதுதான். "இதுவரை நாம் அண்டத்தில் மூன்று பரிமாணங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனுடன் ஐன்ஸ்டைன் கூறிய ஸ்பேஸ்டைம் (Spacetime) நான்காவது பரிமாணமாகிறது. அத்துடன் பரிமாணங்கள் நின்றுவிடவில்லை. இவை தவிர்ந்து மேலும் ஆறு பரிமாணங்கள் உள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து ஸ்ட்ரிங் தியரிகளும் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் உரியவை. ஆறாவது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐந்து ஸ்ட்ரிங்க் தியரிகள் இருப்பதற்கும், அவை உண்மையான சமன்பாடுகளாக இருப்பதற்கும் இதுதான் காரணம். ஒன்றை ஒன்று பிரதிபலிக்கக் கூடிய விம்பங்கள் போன்றவைதான் இந்தப் பரிமாணங்கள். மொத்தமாக பத்துப் பரிமாணங்கள் உள்ளன."

நாம் வாழும் பூமியிலும், அண்டத்திலும் முன்பின், இடம்வலம், மேல்கீழ் என்ற மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன என்பதை மட்டுமே நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. அதற்கு மேல் நான்காவதாக இன்னுமொரு பரிமாணம் உள்ளதென்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் மொத்தமாக 10 பரிமாணங்கள் இருக்கின்றன என்று எம் தியரி சொல்கிறது. அவற்றை எப்படி நம்மால் நினைத்துப் பார்க்க முடியும்? நவீன இயற்பியல் இந்த முடிவை ஏனோதானோவென்று ஒரு கட்டுக்கதையாகச் சொல்லிவிடவில்லை. அனைத்தையும் கணித, இயற்பியல் சமன்பாடுகளுக்குள் உள்ளடக்கி, அறிவியல் ஆதாரச் சான்றுகளுடன், முழுமையான ஒரு கோட்பாடாகத்தான் சொல்கிறது. இந்த முடிவை உலகில் உள்ள எந்த ஒரு இயற்பியல் விஞ்ஞானியும் மறுத்ததில்லை. அனைவரும் இதைச் சரியென்றே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். நவீன இயற்பியலின் இந்த ஆராய்ச்சிகளின் இறுதி முடிவாக சுப்பர் கிராவிட்டேசன் (Supergravitation) என்பதும் ஒரு பரிமாணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மொத்தமாக 11 டைமென்சன்கள் (பரிமாணங்கள்) அண்டத்தில் உண்டு என்ற முடிவு தீர்மானமாக எடுக்கப்பட்டது. 

பூமியில் வாழும் மனித இனத்தால் இடம்வலம், மேல்கீழ், முன்பின் என்ற மூன்று பரிமாணங்களூடாக மட்டுமே தற்சமயம் பிரயாணம் செய்ய முடியும். ஆனால் ஐன்ஸ்டைனின் சார்புவேகக் கோட்பாட்டின்படி, நான்காவது பரிமாணமான நேரத்தினூடாகவும் மனிதனால் பிரயாணம் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தற்சமயம் நேரத்தினூடாகப் பிரயாணம் செய்ய முடியாவிட்டாலும், அதற்கான சாத்தியக் கூறுகளை இப்போதும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இது தாண்டி ஐந்திலிருந்து பதினோராவது பரிமாணங்களுக்குள் மனிதன் பிரயாணம் செய்ய முடியுமா? முடியாதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஆனால் இன்னுமொன்றையும் சொல்கிறது இயற்பியல். அனைத்துப் பரிமாணங்களும் ஒரு நுண்ணிய தோல் போன்ற ஒன்றினால் பிரிக்கப்பட்டு மிக மிக அருகில் காணப்படுகின்றன. இந்த மெல்லிய நுண்ணிய தோல் போன்ற ஒன்றைத்தான் பிரான் (Brane)அல்லது மெம்பிரான் (Membrane) என்கிறார்கள். இந்த மெம்பிரான் என்பதிலிருந்துதான் M Theory என்பதில் உள்ள M தோன்றியதாகவும் சொல்வார்கள். 

பரிமாணங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன என்பதை வார்த்தைகளால் சொல்லும் போது, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. அதனால் இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு புள்ளியை ஊடறுத்துச் செல்லும் முன்பின் நேர்கோடு ஒரு பரிமாணம் ஆகும். அந்த நேர்கோட்டில் முன்னும் பின்னுமாக மட்டும் ஒரு உயிரினம் இயங்கினால், அது ஒரு பரிமாணத்தில் இயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த ஒரு பரிமாண நேர்கோட்டிற்கு வலமாகவோ, இடமாகவோ ஒரு மில்லிமீட்டர் அளவிலாவது அந்த உயிரினம் நகர்ந்தால் அது இரண்டாம் பரிமாணம் என்றாகிவிடும். அதாவது முதலாவது பரிமாணத்தின் இடது பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ ஒரு மில்லிமீட்டருக்கு குறைவான இடத்திலேயே இரண்டாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. அதே போல, இந்த இரண்டு பரிமாணங்களுக்கு மேலாகவோ, கீழாகவோ ஒரு மில்லிமீட்டருக்குக் குறைவான உயரத்தில் மூன்றாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த மூன்று பரிமாணங்களும் மிகச் சிறிய இடைவெளியுடன் அருகருகே இருக்கின்றன. இது உங்களுக்குப் புரிகின்றதா? அதாவது முதல் மூன்று பரிமாணங்களும் மிக மிக மெல்லிய கோடொன்றினால்தான் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அது போலவே நான்காவது பரிமாணமும், ஐந்தாவது பரிமாணமும் அப்படியே பதினோராவது பரிமாணமும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன. எல்லாமே நானோ மீட்டர் அளவு இடைவெளிகளில் காணப்படுகின்றன.

பரிமாணங்கள் பற்றி நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருந்தால், இந்தப் பரிமாணங்கள் சம்மந்தமாக இனி நான் சொல்லப் போவதுதான் நீங்கள் எதிர்பார்க்காத, ஆச்சரியமான தகவல்களாக இருக்கும். இந்தத் தகவல்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் கூடப் போகலாம். இப்போது நான் சொல்லப் போவதே இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு அடிப்படையாகவும் அமைந்தது. இனி விசயத்துக்கு வருகிறேன்.

மூன்று உயிரினங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒன்று முன்பின்னாக நகரும் ஒரு பரிமாணத்தில் மட்டும் வாழும் ஒரு உயிரினம். மற்றது முன்பின், இடம்வலம் என்று தட்டையான இடத்தில் நகரக் கூடிய இரண்டு பரிமாணத்தில் வாழும் ஒரு எறும்பு. மூன்றாவது முன்பின், இடம்வலம், மேல்கீழ் என அனைத்திலும் நகரக் கூடிய முப்பரிமாணத்தில் வாழும் ஒரு மனிதன். ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினத்தால், இடம்வலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எறும்பைக் காணவே முடியாது. எறும்பு இடம்வலமாக நகரும் போது, முன்பின்னாக நகரும் கோட்டை எப்போது வெட்டுகிறதோ, அப்போது மட்டும் அந்த உயிரினத்தால் அந்த எறும்பைக் காண முடியும். ஆனால் எறும்பினால் அந்த உயிரினத்தை எப்போதும் காண முடியும். இது போல, மூன்று பரிமாணத்தில் நகரக் கூடிய மனிதனால், இரண்டு பரிமாணத்தில் நகரும் எறும்பையும், அந்த உயிரினத்தையும் எப்போதும் காண முடியும், அவை இரண்டினாலும் மனிதனை முழுமையாகக் காணவே முடியாது.

மேலே நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், இப்பொழுது நான் சொல்லப் போவதைச் சிந்தித்துப் பாருங்கள். பூமியிலோ, அண்டத்திலோ மொத்தமாக 11 பரிமாணங்கள் உள்ளன என்று அறிவியல் சொல்கின்றது அல்லவா? அப்படி 11 பரிமாணங்கள் இருக்கும் பட்சத்தில், அந்த ஒவ்வொரு பரிமாணங்களிலும் ஏன் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது? இரு பரிமாணத்தில் இயங்கும் எறும்புக்கு கழுகு என்ற ஒரு பறவை இருக்கிறது என்று சொன்னால் அதனால் அதை நம்பவே முடியாது. காரணம் கழுகு மூன்றாவது பரிமாணத்திலேயே எப்போதும் பறந்து கொண்டிருப்பது. அதுவாக இரண்டாம் பரிமாணத்தில் நுழைந்தால் மட்டுமே அப்படி ஒன்று உண்டு என்பதை எறும்பு நம்பும் அல்லவா? அது போல, நாமும் நான்காவது ஐந்தாவது ஆறாவது என இப்டியே...... பதினோராவது பரிமாணங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று சொல்லும் போது, நம்பப் போவது இல்லை. அதிகம் ஏன் அதை நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது. ஆனால் கடந்து வந்த மனித வரலாற்றில், ஆவி போன்ற உருவங்களையும், பேய்கள் போன்ற உருவங்களையும், அரக்கர்கள் போன்ற உருவங்களையும், தேவர்கள் போன்ற உருவங்களையும், கடவுள் போன்ற உருவங்களையும் மனிதன் கண்டிருக்கிறான் என்று படித்திருக்கிறோம், அதை நம்புகிறோம். இவையெல்லாம் ஏன் கடவுளாகவும், பேய்களாகவும், அரக்கர்களாகவும் இல்லாமல் வெவ்வேறு டைமென்சன்களில் வாழும் உயிரினங்களாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு பரிமாணமும் அதிகரிக்க, அதில் வாழும் உயிரினத்தின் சக்தி அதிகமானதாக இருக்க வேண்டும் அல்லவா? ஒரு பரிமாணத்தில் வாழ்பவனை விட இரண்டு பரிமாணத்தில் வாழ்பவன் அதிக சக்தியுடையவனாகவும், அதைவிட மூன்றாவது பரிமாணத்தில் வாழ்பவன் அதிக சக்தியுடையவனாகவும், இப்படியே படிப்படியாக அதிகரித்து 11வது பரிமாணத்தில் வாழ்பவன் மிக அதியுயர் சக்தி வாய்ந்தவனாக இருப்பான் அல்லவா? அவனைத்தான் நாம் கடவுள் என்று சொல்கிறோமா?

கொஞ்சம் அமைதியாக இதை யோசனை செய்து பாருங்கள். கடவுள் என்றோ, தேவர்கள் என்றோ, அரக்கர்கள் என்றோ, பேய்கள் என்றோ, ஆவிகள் என்றோ நாம் நினைக்கும் எவையும் நம் கதைகளில் வருபவை போலல்லாமல், ஒவ்வொரு பரிமாணத்திலும் வாழும் உயிரினங்களாக அவை ஏன் இருக்கக் கூடாது? இப்போது இதை நம் சமய இலக்கியங்கள் சொன்ன சில கருத்துகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலுலகம், கீழுலகம் என ஈரேழு உலகங்கள் உண்டெனவும், ஒவ்வொரு உலகங்களிலும் ஒவ்வொருவர் வாழ்வதாகவும் சொல்லியிருக்கிறதல்லவா? இந்த உலகங்கள் ஏன் ஒவ்வொரு டைமென்சனிலும் அமைந்தவையாக இருக்கக் கூடாது? மேல் பரிமாணங்களில் வாழ்பவர்கள் அப்பப்போ நாம் வாழும் மூன்றாவது பரிமாணத்திற்குள் நுழையும் போது, அவர்களைச் சிலர் கண்டு கொள்கின்றனர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? ஆதிகாலத்தில் மனிதனுடன் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அடிக்கடி தொடர்புகளையும் வைத்திருந்திருக்கலாம் அல்லவா? இவையெல்லாவற்றுக்கும் சான்றாக பண்டைய சமய இலக்கியங்களில் பல உதாரணங்களை நீங்கள் கண்டு கொள்ளலாம். ஆதிகால மனிதனால் செய்திருக்கவே முடியாத சாத்தியமில்லாத பல விசயங்கள் நடைபெற்றிருப்பதற்கு நிறையச் சான்றுகள் இன்றும் நம் கண் முன்னே உள்ளன. அந்த ஆதி மனிதனுக்கு ஏதோ ஒரு மேல் பரிமாணத்தில் வாழும் ஒரு இனம் உதவியிருக்கலாம் அல்லவா? இப்படி நான் சொல்லும் போது, நீங்கள் முழுமையான ஆன்மீகவாதியாக இருந்தால் கோபப்படவே செய்வீர்கள். ஆனால் இந்தச் சாத்தியங்களை கோபம் என்ற உணர்வில்லாமல் அறிவியலாகச் சிந்தித்துப் பாருங்கள். நமக்கு முன்னால் இருக்கும் சகல பஸில் துண்டுகளும் (Puzzle) முறையாக அதனதன் இடத்தில் தானாகப் பொருந்துவதைக் காண்பீர்கள். 

இத்துடன் இது முடிந்துவிடவில்லை. நவீன இயற்பியல் பல பரிமாணங்கள் உள்ளது போல, பல அண்டங்களும் உள்ளன என்று நம்புகிறது. அதாவது இதுவரை ஒரே அண்டம் இருக்கிறது என்றுதான் நம்பியிருந்தோம். அதனால்தான் அண்டத்திற்கு 'Uni'verse என்றே பெயரிட்டிருந்தோம். ஆனால் இப்போது இருப்பது யூனிவேர்ஸ் அல்ல மல்டிவேர்ஸ் (Multiverse) என்கிறது நவீன இயற்பியல். மல்டிவேர்ஸ் என்று சொல்லும் போது, பத்து அண்டம், நூறு அண்டம் அல்ல, ஒரு சமுத்திரத்தில் எத்தனை நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ அத்தனை அண்டங்கள் இருக்கின்றன என்கிறார்கள். இதையெல்லாம் சிந்தித்தால் நாம் பைத்தியமாகிப் போகும் நிலைதான் உருவாகும்.

நவீன இயற்பியலால் குறிப்பாகச் சொல்லப்பட்ட இன்னுமொரு விசயமும் உண்டு. அதுதான் 'பாரலல் யூனிவேர்ஸ்' (Parallel Universe) என்பது. உலகில் உள்ள அனைத்துக்கும் சமனானதும், நேரெதிரானதுமான இன்னுமொன்று இருந்தே தீரும் என்கிறது அறிவியல். பூமி சமநிலையில் இருப்பதற்கு இந்த இரட்டைச் சமர்ச்சீர்த்தன்மை மிகவும் அவசியமானது. மனிதனை எடுத்துக் கொண்டாலே வலது இடது என இரண்டு சமபகுதிகளாகவும், நேரெதிராகவும் சமச்சீராகப் பிரிக்கப்பட்டு இருப்பான். நேர் (Plus) என்ற ஒன்றிருந்தால், எதிர் (Minus) என்ற ஒன்று இருந்தே தீர வேண்டும். இரவு பகல், ஆண் பெண், கடவுள் சாத்தான், நீர் நெருப்பு, கிருஸ்து ஆன்டி கிருஸ்து, சொர்க்கம் நரகம், குளிர் வெப்பம் என்று எல்லாமே இரட்டையாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். இது போல, அண்டத்தில் மாட்டர் (Matter) நிறைந்திருக்க, அதற்கு எதிரான ஆன்டி மாட்டர்களும் (Antimatter) நிறைந்திருக்கின்றன. அணுக்களானாலென்ன, அண்டமானாலென்ன அனைத்துமே சமச்சீராகத்தான் (Symmetry) இருக்கின்றன. இதனால்தான் விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு உப அணுத்துகள்களுக்கும் (Subatomic particle) சமமானதும் எதிரானதுமான இன்னுமொரு உப அணுத்துகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோல நமது அண்டத்துக்குச் சமச்சீராகவும், எதிரானதுமான ஒரு அண்டம், நமது அண்டத்துக்குச் சமாந்தரமாகவே இருக்கிறது என்று அறிவியல் வல்லுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அதைத்தான் சமாந்தர அண்டம் (Parallel Universe) என்று பெயரிட்டும் அழைக்கிறார்கள். இந்தச் சமாந்தர அண்டம், நமது அண்டத்துக்கு மிக அருகில், நமது அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போல இருக்கிறது. நான், நீங்கள், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என எல்லாரும், இங்கிருப்பது போல அங்குமிருப்போம். ஆனால் எல்லாமே எதிரெதிராக. இங்கு நீங்கள் இறந்து போனாலும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இங்கு கெட்டவனாக இருக்கும் நீங்கள் அங்கு நல்லவனாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். உங்கள் நெருங்கிய உறவினர்கள் யாராவது இறந்திருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையே இல்லை. அவர்கள் உங்களுக்கு மிக அருகிலேயே பாரலலாக உள்ள அண்டத்தில் இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

'என்ன இது, அறிவியல் இப்படியெல்லாம் மூடத்தனமாக பேசுகிறதே!' என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். இதில் சொல்லப்பட்ட எதையும் அறிவியல் தகுந்த காரணம் இல்லாமல் சொல்லிவிடவில்லை. இதில் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிவியல் அறிஞர்கள் அனைவரும் தீர்மானமாக ஏற்றிருக்கிறார்கள். பல விசயங்களை முடிவான முடிவாக அறுதியிட்டுச் சொல்லும் அளவுக்கு நமது விஞ்ஞானக் கருவிகள் இன்னும் வளரவில்லை. எப்போது அந்த வளர்ச்சிகள் ஏற்படுமோ அப்போது இவை எல்லாம் நம் கண் முன்னே சாத்தியமாகலாம். அதுவரை இவை அறிவியல் கோட்பாடுகளாக நம்மிடையே இருந்து கொண்டே இருக்கும். 

-ராஜ்சிவா-