Tuesday, February 26, 2013

அடுத்த போப் தான் இறுதி போப்?! பயத்தில் படபடக்கும் உலகம்!

அடுத்த போப் தான் இறுதி போப்?! பயத்தில் படபடக்கும் உலகம்! எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் By மோகன ரூபன்

அழகிய சிங்கர் யார் தெரியுமா?’’

இந்த கேள்விக்கு ‘‘பாப் மடோனா!’’ என்று பதிலளித்து தசாவதாரம் படத்தில் கமல் பட்டையைக் கிளப்புவார். அதுபோல ‘‘பாப்பரசர் யார் தெரியுமா?’’ என்று கேட்டால் அவசரப்பட்டு பாப் இசைக்கே அரசர் என்ற நினைப்பில் பாப் மார்லி அல்லது மைக்கேல் ஜாக்சனின் பெயரை நாம் கூறிவிடக்கூடாது.

‘பாப்பரசர்’ என்ற பெயர் போப்பாண்டவரைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 110 கோடி ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் அவர். இத்தாலியின் தலைநகரமான ரோமில் உள்ள வாடிகன் என்ற 0.17 சதுர மைல் பரப்பளவுள்ள சின்னஞ்சிறிய நாட்டுக்கு அவர் அதிபரும் கூட.

இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான இராயப்பர் என்ற பீட்டர்தான் உலகின் முதல் போப்பாகக் கருதப்படுகிறார். அன்று தொடங்கி இன்று வரை இரண்டாயிரம் ஆண்டுகாலமாக போப்களின் பரம்பரை மற்றும் பாரம்பரியம் தொடர்கிறது. வாடிகனில் உள்ள அரண்மனையில் வழி வழியாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்றுள்ள 264&வது போப்பான 85 வயது பதினாறாம் பெனடிக்ட் வரும் பிப்ரவரி 28&ம் தேதி போப் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். போப்களின் வரலாற்றில் இதுவரை 4 போப்கள் மட்டுமே தன்னிச்சையாக பதவி விலகியிருக்கிறார்கள். கடந்த 600 ஆண்டு வரலாற்றில் இப்படி தானாக முன்வந்து பதவியைத் துறக்கும் முதல் போப், பதினாறாம் பெனடிக்ட்தான். ‘‘முதுமை காரணமாக பதவி விலகுகிறேன்!’’ என்று அவர் அறிவித்து அகில உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

போப்பின் இந்த திடீர் முடிவால் திகைத்து திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள் ‘விஷயம்’ தெரிந்த கிறிஸ்துவர்கள் பலர். என்ன காரணம்? தொடர்ந்து படியுங்கள்…

போப் ஒருவர் இறந்து போனாலோ அல்லது பெனடிக்டைப் போல அபூர்வமாக பதவி விலகினாலோ புதிய போப்பை வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வார்கள். கர்தினால்கள் (கார்டினல்கள்) எனப்படும் உயர்குருக்களில் ஒருவர்தான் போப்பாக முடியும். புதிய போப் தேர்வின் போது தற்போது 118 கர்தினால்கள் வாக்களிக்கப் போகிறார்கள். அதில் 4 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

புதிய போப் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது வாக்கெடுப்புக்குப் பிறகுதான் தெரியும் என்றாலும் அடுத்தடுத்து வரப்போகும் போப்கள் யார் யார் என்பதைப் பற்றி புனித மலாக்கி என்பவர் பல நு£ற்றாண்டுகளுக்கு முன் ஏற்கனவே தீர்க்கதரிசனமாக எழுதி வைத்துவிட்டார்.

இந்த மலாக்கி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பேராயர். கி.பி. 1139&ம் ஆண்டு அப்போதிருந்த போப்பை சந்திக்க வாடிகனுக்கு வந்த இடத்தில் புனித மலாக்கிக்கு ஒரு ‘தெய்வீகக் காட்சி’ தென்பட, அதை வைத்து அடுத்தடுத்த போப்கள் யார் யார் என்பதை ஒரு புத்தகமாக அவர் எழுதி வைத்து விட்டார். அதற்காக புனிதர் பட்டத்தையும் அவர் பெற்று விட்டார்.
தன் காலத்துக்குப் பிறகு வரப்போகும் ஒவ்வொரு புதிய போப்பைப் பற்றியும் ஒரே வரியில் எழுதிவைத்திருப்பது மலாக்கியின் ஸ்டைல்.

உதாரணமாக 109&வது போப்பை ‘பாதி நிலா’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் 109&வது போப்பாக வந்தார் முதலாம் ஜான்பால். போப்பாகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே அவர் இறந்து போக, பாதி நிலா என்ற வார்த்தைக்-கு அர்த்தம் அப்போதுதான் பலருக்குப் புரிந்தது.

110&வது போப்பை ‘சூரியனின் தொழிலாளி’ என்று வர்ணித்திருந்தார் மலாக்கி. 110&வது போப்பாக வந்த இரண்டாம் ஜான்பால் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். போலந்து ‘கிழக்கில்’ உள்ள கம்யூனிச (தொழிலாளர்) நாடாக அப்போது இருந்தது. சூரியன் உதிப்பது கிழக்கில்தான் என்பதால் 2&ம் ஜான்பாலுக்கு சூரியனின் தொழிலாளி என்ற பெயர் அட்டகாசமாகப் பொருந்திப் போனது. (போப் 2&ம் ஜான்பால் பிறந்த போதும், இறந்த போதும் சூரிய கிரகணம் ஏற்பட்டது தனிக்கதை!)

அதன்பின் 111&வது போப்பை நாம் ‘மஞ்சள் மகிமை’ என்று குறிப்பிடுவதைப் போல ‘ஆலிவ் மகிமை’ என்று குறிப்பிட்டிருந்தார் மலாக்கி. அதை வைத்து வரப்போகும் புதிய போப் ஆலிவ் நிறத்தில் இருப்பார் என்று சிலர் கணித்தார்கள். ஆலிவ் இலைக் கொத்து யூதர்களின் பாரம்பரிய சின்னம் என்பதால் புதிய போப் ஒரு யூதராக இருப்பார் என்று இத்தாலி நாட்டின் ‘லா ஸ்டாம்பா’ நாளிதழ் ஊகித்திருந்தது.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சபைகளில் ஒன்றான பெனடிக்கன் சபையை ‘ஒலிவேத்தியன் சபை’ என்பார்கள். ஆகவே பெனடிக்கன் சபையைச் சேர்ந்த ஒருவர்தான் புதிய போப்பாகப் போகிறார் என்றும் சிலர் கணித்தார்கள். ஆனால் பெனடிக்கன் சபையில் அப்போது எஞ்சியிருந்தவர் ஒரே ஒரு கர்தினால்தான். அவரும் 93 வயதைக் கடந்திருந்தார். 80 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் போப்பாக முடியும் என்பதால் அவருக்கு வாய்ப்பில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது.

இந்த நிலையில்தான் 111&வது போப்பாக ஆனார் ஜெர்மனியைச் சேர்ந்த பதினாறாம் பெனடிக்ட். பெனடிக்கன் சபையைச் சேர்ந்த ஒருவர் போப் ஆகாமல் பெனடிக்ட் பெயருள்ள ஒருவர் போப்பானதால் புனித மலாக்கியின் தீர்க்கதரிசனத்தை நினைத்து பலர் வாய் பிளந்து நின்றார்கள்.

இந்த நிலையில்தான் இப்போது அதிர்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. புனித மலாக்கியின் தீர்க்க தரிசனப்படி 112&வது போப்பாக வருபவர்தான் கடைசி போப்(!). உலகின் முதல் போப்பின் பெயர் பீட்டர் என்பது போல கடைசிப் போப்பின் பெயரும் பீட்டராகவே இருக்கும் என்பது மலாக்கியின் கணிப்பு. ‘ரோமைச் சேர்ந்த பீட்டர்’ (பெட்ரஸ் ரோமனஸ்) என்று அந்த கடைசி போப்பை மலாக்கி வர்ணித்திருக்கிறார்.

‘‘இந்த 112&வது போப்பின் வருகை யுக முடிவைக் குறிக்கிறது. இந்த போப் ஏழு மலைகள் கொண்ட ரோம் நகரை விட்டு நீங்குவார். உலகப் போர் மூளும். உலகம் அழியும்’’ என்பது மலாக்கியின் கணிப்பு!

கத்தோலிக்க கர்தினால்கள் எனப்படும் உயர்துறவிகளில் ஒருவர்தான் போப்பாக முடியும் என்றநிலையில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் தற்போது 115 கர்தினால்கள் உள்ளனர். இதற்குமுன் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே போப்பாகும் யோகம் கிடைத்திருக்கிறது. நம் காலத்தில் கடைசி 2 போப்கள்தான் முறையே போலந்து, ஜெர்மனி நாடுகளில் இருந்து போப்பாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கறுப்பரான ஒபாமா அதிபரானது போல, புதிய போப்பாக கறுப்பர் ஒருவரை நியமிக்கலாம் என்ற கருத்து வலுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த ‘பீட்டர்’ கோட்வோ துர்க்சன் என்பவர்தான் புதிய போப் என்ற எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. இவரது பெயரில் பீட்டர் இருப்பது பலரை வியப்பு கலந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையே கடைசி இரு போப்களும் வெளிநாட்டவர்கள் என்பதால் ரோமைச் சேர்ந்த ஒருவரைத்தான் போப்பாக்க வேண்டும் என்ற கருத்து இத்தாலி நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது. 2013&ல் உலகம் அழியும் என்ற மாயன்களின் ஆரூடம் பற்றிய பயம் இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், போப் பதினாறாம் பெனடிக்டின் திடீர் ராஜினாமாவும், புதிய போப் (இறுதி போப்?) வரப்போவதும் உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவர்களின் நெஞ்சத்தில் பயத்தை விதைத்துள்ளது.

புதிய போப் யார்? ரோமைச் சேர்ந்த பீட்டர்தானா? அவருக்குப் பின் உலகம் அழியுமா? காத்திருப்போம் நாம்!

நன்றி : தமிழக அரசியல்

நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்...

No comments: