Friday, February 13, 2015

லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (தமிழர் வெர்சன்) :

லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (தமிழர் வெர்சன்) :
ஒரு மாலை நேரம் ஸ்காட்ச் பாட்டிலுடன் மொட்டை மாடியில் அமருகிறார் விஜயகாந்த்.அப்போது அங்கு கோரமான உருவத்துடன் வரும் விக்ரம்,"அந்த மோதிரத்தை குடு" என்று கேட்கிறார்.
"தம்பி எந்த மோதிரம்ப்பா?" என்று விஜயகாந்த் கேட்க..ப்ளாஷ்பேக் சொல்ல துவங்குகிறார் விக்ரம்.விளம்பர மாடலான விக்ரம்க்கு எதிரிகள் செலுத்திய வைரஸால் உடல் கோரமாகி விடுகிறது.
அதை சரி செய்ய டாக்டர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனிடம் செல்கிறார்,அவர் இதை மருத்துவத்தால் சரி செய்ய முடியாது ஆனால் ஒரு சக்தி வாய்ந்த 'மோதிரம்' இருக்கு அது கிடைத்தால் சரி செய்யலாம் என்கிறார்.
அந்த மோதிரம் 10ஆம் நூற்றாண்டில் கமலஹாசன் என்னும் வைணவர் அணிந்திருந்தது.அப்போது ஏற்பட்ட சைவ வைணவ மோதலில் மன்னர் நெப்போலியன் அவரை பெருமாள் சிலையுடன் கல்லை கட்டி கடலில் போட்டு விட்டார்.
அந்த மோதிரத்தை ஒரு மீன் விழுங்கி விடுகிறது.அந்த மீன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் தனுஷ் வலையில் சிக்குகிறது. குழம்பு வைக்க மீனை நறுக்கும்போது மோதிரம் கிடைகிறது.
ஒருநாள் தனுசை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திவிட அவர்களிடம் மோதிரம் செல்கிறது. அப்போது கடத்தல் மன்னன் சூர்யா வைரம் கடத்த அங்கு செல்கிறார்.அங்கு ஏற்படும் சண்டையில் அவர் கையில் மோதிரம் கிடைகிறது.
சூர்யா இந்தியா வருகிறார்.விமான நிலையத்தில் சோதனை நடக்கிறது.அதிகாரி அஜித் கையில் அந்த மோதிரத்தை கொடுத்துவிட்டு சூர்யா தப்பி விடுகிறார். அதை அஜீத் தன் மனைவியான த்ரிஷாவுக்கு அணிவிக்கிறார்.
முன்பகை காரணமாக அஜீத் மனைவியை வில்லன்கள் கடத்தி கொல்கிறார்கள். அவர்கள் மோதிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அந்த மோதிரத்தை கொல்லைகூட்டதில் இருக்கும் சாராயம் கடத்தும் பெண் அம்பிகா பெறுகிறார்.
சாராயம் கடத்தும் பெண் அந்த மோதிரத்துடன் ஒரு டாக்சியில் செல்லும்போது மோதிரத்தை தவற விடுகிறார்.டாக்சிகாரர் ரஜினி அந்த மோதிரம் யாருடையது என்று தெரியாமல் யோசிக்கும்போதே அவர் தம்பி கல்லூரியில் பீஸ் கட்ட பணம் தேவைப்படுகிறது.
பீஸ்-க்கு பதில் மோதிரத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்து விடுகிறார்.அவர் அந்த மோதிரத்தை தன் மகள் நஸ்ரியாவுக்கு மாட்டி விட்டு இறந்து விடுகிறார். அனாதையான அவர் மகள் ஆர்யா என்பவரை காதலிக்கிறார்.
ஒரு முறை அவர்கள் வெளியே செல்லும்போது நஸ்ரியா ஒரு ஆக்சிடெண்டில் உயிரிழக்கிறார்.அப்போது மோதிரம் கீழே விழுந்து விடுகிறது.அதை ஒரு முதியவர் கண்டெடுக்கிறார்.முதியவர் ஏற்கனவே ஒரு மோதிரத்துடன் சேர்த்து இதையும் இரண்டாவதாக போட்டுக்கொள்கிறார்.
அவர் தங்கியுள்ள முதியோர் இல்லத்தை விஜய் பராமரிக்கிறார்."ஒரு மோதிரத்துக்கு மேல் நீ போட்ருக்க ஒவ்வொரு மோதிரமும் அடுத்தவனோடது" என்று சொல்லி அந்த மோதிரத்தை கைப்பற்றுகிறார் விஜய்.
பின் ஒருமுறை அவரை துரத்தும் வில்லன்களிடமிருந்து தப்ப ஒரு வீட்டு மொட்டை மாடியில் இருந்து பறந்து ரயில்வே ப்ரிட்ஜை பிடிக்கிறார்.அப்போது வானத்தில் எதிரில் வந்த விஷால் சுமோவில் மோதி மோதிரம் கீழே விழுகிறது.
அந்த மோதிரத்தை அந்த பக்கமாக செல்லும் டி.ஆர் பார்க்கிறார்.அதை கொடுத்து தங்கை கல்யாணி கல்யாணத்தை சிறப்பாக நடத்துகிறார்.மோதிரம் தங்கை கணவரான விஜயகாந்த் கையில் கிடைக்கிறது.
ப்ளாஷ்பேக்கை முடிக்கும் விக்ரம்,"உன்னிடம் இருக்கும் அந்த மோதிரத்தை குடு" என்று கேட்கிறார்."அந்த மோதிரத்தை சேட்டு கடையில அடகு வச்சு தாண்டா இந்த சரக்கே வாங்குனேன்" என்கிறார் விஜயகாந்த்.
இருவரும் சேட்ஜியை பிடித்து மோதிரத்தை வாங்க கடைக்கு செல்ல,அவர் குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு எஸ்கேப் ஆகி விடுகிறார். தனது செயலால் விக்ரமுக்கு உதவ முடியாததை எண்ணி விஜயகாந்த் குடிப்பதை நிறுத்திவிடுகிறார்.
தமிழகம் மதுவின் பிடியிலிருக்கும் போது வளங்கள் எப்படி சுரண்டப்படுகின்றன.'மது நாட்டுக்கும்,வீட்டுக்கும்,விக்ரமுக்கும் கேடு' என்னும் மெசேஜ் உடன் படத்தை முடிக்கிறோம்...

No comments: