Wednesday, December 2, 2015

நல்ல மனிதன்...

ஒரு பெரிய மருத்துவமனை...
அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.

இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர்.

ஒருவரின் படுக்கை சன்னல் அருகில்.

இன்னொருவருக்கு சன்னல் கிடையாது.

எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர

தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய்.

இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி.

நாளடைவில் இருவரும் நட்பாகிவிட்டனர்.

ஒருமுறை,
எலும்பு முறிவு நோயாளி சன்னல் ஓர நோயாளியிடம் சொன்னார்..
உனக்காவது பொழுது போக்காக, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன்.
இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

நண்பா..

சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி..
நடுவில் சிறு தீவு..
ஏரியில் படகுகள் மிதக்கின்றன..
ஏரிக்கரையில் அழகான பூங்கா..!
காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை..
அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது..
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன.
மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்..
மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை, தனிமை...

ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க...

அங்கே பெரிய சுவர்..!
வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி,
எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார் என்று....

அன்பு நண்பர்களே ..

தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களின் நன்மைக்காக
செயல்படுபவனே நல்ல மனிதன்....

படித்தேன் பிடித்துப்போய்விட்டது..
அதனால் பகிர்கிறேன் உங்களுக்காக..

😊😊😊😊😊😊😊😊😊

No comments: